
Paripatal
எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்து அமைந்த நூல் பரிபாடலாகும். பரிபாடல் என்பது யாப்பு வகையால் பெற்ற பெயர். இதில், திருமால், முருகன், கொற்றவை என்ற தெய்வங்கள் பற்றியும், மதுரை நகர் பற்றியும், வையையாறு பற்றியும் புகழ்ந்து பேசும் எழுபது பாடல்கள் இருந்தன. அழிந்தவை போக இப்போது 22 பாடல்களும் சில சிதைந்த உறுப்புகளுமே எஞ்சியுள்ளன. புறத்திரட்டிலிருந்து வேறு இரு பாடல்கள் கிடைத்துள்ளன.
இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. இதிலுள்ள பாடல்களை இயற்றியோர் பதின்மூவர். இவற்றுக்கு இசை வல்லுநர்களைக் கொண்டு பண் வகுக்கப்பட்டுள்ளன. பாடலாசிரியர் பெயருடன், இசை வகுத்தவர் பெயரும், பண்ணின் பெயரும் ஒவ்வொரு பாடலுக்கும் கீழ் தரப்பட்டுள்ளன. கண்ணகனார் முதல் மருத்துவன் நல்லச்சுதனார் ஈறாகப் பத்து இசையறிஞர்கள் பண் வகுத்துள்ளனர்.
இதில் திருமால் பற்றியனவும், முருகன் பற்றியனவுமான புராணச் செய்திகள் மிகுதி. மேலும், புதிய இலக்கணக் கூறுகளும், புதிய சொல்லாட்சியும், வடசொற் கலப்பும் மிகுந்து காணப்படுகின்றன.
முருகப் பெருமானுக்கும் திருமாலுக்கும் தொடர்புடைய புராணச் செய்திகளும், வையையில் நீராடுவாரின் பல்வேறு செயற்பாடுகளும் சுவையுடன் இதில் கூறப்பட்டுள்ளன. இசை, கூத்து ஆகிய கலைகள் பற்றிய நுட்பமான செய்திகள் இதில் உண்டு. திருப்பரங்குன்றத்தில் ஓவிய மண்டபம் இருந்த செய்தியை அறியலாம்.
Praise
