
துறவி
வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். "ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு "லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது "லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். "வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு.
கையெழுத்துப் பிரதியிலேயே தங்கிப் போன வெள்ளியங்காட்டானின் அகவல் இலக்கியம் துறவி. தானாக இருந்து தன்னைக் கண்டு தன்னில் இறைவனைக் கண்டு தானாகவே இருப்பதே உபநிடதம் கண்ட வாழ்வறம். இதைச் சொல்லிப் போவது ஓர் அசாத்தியனுக்கே சாத்தியம்.
பொலிவும் நலிவும் பொருந்தப் புலரும்
முதலும் முடிவும் விதவாக் காலமே!
உன்னைநீ யுணர்த்திய தொப்ப
என்னைநா னுணர்த்துவ னிதயமின் புறவே!
பேராசிரியர் ரமணியின் யாப்போசை ஒலிவடிவில் துறவி.
Praise
